மயிலாடுதுறை:திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு, சிவனடியார்களுக்கு வஸ்திர தானமும், சேவையாளர்களுக்கு பொருட்களையும் வழங்கி அருளாசி வழங்கினார்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த, சைவ ஆதீன திருமடம் உள்ளது.இந்த ஆதீனத்தின் 24வது குரு மகாசன்னிதானமாக அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.இவரது ஜென்ம நட்சத்திர திருநாள் விழா, நேற்று, ஆதீன திருமடத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஞானமா நடராஜப் பெருமானுக்கும், ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து சிவப்பிரகாச விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் செய்யப்பட்டு, குருமகாசன்னிதானம் முன்னிலையில் பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. ஹோமத்தை 15க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.தொடர்ந்து குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரம்மாச்சாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் கோவிலில் கோ பூஜை, கஜபூஜை செய்ததுடன், சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார்.அதையடுத்து ஆதீனத் திருமடம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நவீனமயமாக்கப்பட்ட நமச்சிவாய மூர்த்திகள் அச்சகத்தை திறந்து வைத்தார்.விழாவில் பல்வேறு சமுதாய சேவையில் சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கு மனிதநேய மாமணி என்ற பட்டத்தை வழங்கி, தலா 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கி ஆசி வழங்கினார்.மேலும், 100 சிவனடியார்களுக்கு குருமகாசன்னிதானம் வஸ்திர தானம் செய்து அருளாசி புரிந்தார். தொடர்ந்து மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குரு அருளைப் பெற்றனர்.