சென்னை: டெல்டா மாவட்டங்களில், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் துார் வாரும் பணிகள், வரும் 31க்குள் முழுமையாக முடிக்கப்படும்' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு துார் வாரும் பணிகள், ஏப்., 23ல் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன. மொத்தம், 4,964 கி.மீ., துாரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, 4,047 கி.மீ., நீளத்திற்கு, அதாவது 82 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.ஆறுகளை துார் வாரும் பணி முழுதுமாக முடிக்கப்பட்டுள்ளது.
கால்வாய்கள் மற்றும் வடிகால்வாய் துார்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தினமும், 210 கி.மீ., நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில், கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன், மீதமுள்ள பணிகள் அனைத்தும், வரும் 31ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.