மதுரை: மதுரை ஆவினில் நடந்த பணிநியமனங்கள் முறைகேடு குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., ஜெயலட்சுமி தலைமையில் இரண்டு நாட்கள் விசாரணை நடந்தது. இதில் 30 நியமனங்களில் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை ஆவினில் 2020, 2021ல் மேலாளர், எக்ஸிகியூடிவ் உட்பட 61 பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்து தேர்வு வினாத்தாள் 'லீக்', காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, ஒரு பகுதியை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தன.
இதுகுறித்து ஆவின் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக, ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தலைமையிலான குழு இரண்டு முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81ன்படி ஆவின் துணைப் பதிவாளர் (பால் வளம்) கணேசன் தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி., தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை தொடர்கிறது.
இதுகுறித்து தி.மு.க., ஆவின் தொழிற்சங்க முன்னாள் தலைவர் கணேசன் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளில் நடந்த பணி நியமனங்கள் தொடர்பாக ஓய்வு பெற்றோர் சங்கம் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் பல விசாரணைகள் நடந்துள்ளது. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. தற்போது எஸ்.பி., விசாரணை நம்பிக்கை அளிக்கிறது. முறைகேடு தொடர்பாக அப்போது பணியில் இருந்த உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும், என்றார்.
ஆவணங்களுடன் ஆஜராக 'சம்மன்'
இந்நிலையில், துணைப் பதிவாளர் (பால்வளம்) கணேசன் 2020, 2021 ல் மதுரை ஆவினில் நியமனம் செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு இன்று (மே 26) தன் முன்னிலையில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார். அதில் 'பணிநியமன உத்தரவு, கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து வகை ஒரிஜினல் சான்றிதழ், ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
கூடுதல் முதன்மை செயலாளர் முகாம்
தமிழக கால்நடை மற்றும் பால்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் ஜவஹர் மதுரையில் முகாமிட்டு ஆவின் லஞ்ச ஒழிப்பு விசாரணை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஐஸ் கிரீம் தயாரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.