குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் தமிழரசி தலைமையில், ஜமாபந்தி நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., இளவரசி துவக்கி வைத்தார். நேற்று ஆனங்கூர், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், காடச்சநல்லுார், புதுப்பாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம், பாப்பம்பாளையம் ஆகிய பகுதி பொதுமக்கள், 68 புகார் மனுக்கள் கொடுத்தனர். இதில் மோடமங்கலம் அக்ரஹாரம் பகுதி, 3 பட்டா மாறுதல் புகார் மனுவிற்கு, உடனடியாக தீர்வு காணப்பட்டதுடன், முதியோர் உதவி தொகைக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.
இன்று மே, 26ல், கலியனுார், கலியனுார் அக்ரஹாரம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கொக்காராயன் பேட்டை, படவீடு ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. மே, 27ல் சவுதாபுரம், பல்லக்காபாளையம், அய்யம்பாளையம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.