பெண்ணாடம்:நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும் என இருபது கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடி, துறையூர், நந்தப்பாடி, சத்தியவாடி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, கிளிமங்கலம், டி.வி.புத்துார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளாற்றங்கரையோரம் உள்ளது.இங்குள்ள விளைநிலங்களில் போர்வெல் பாசனம் மூலம் நெல், கரும்பு மற்றும் வாழை, கத்தரி, கொத்தவரை, முருங்கை உள்ளிட்ட தோட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயத்திற்கு போதிய மழை இல்லாததால் போர்வெல் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கின்றனர்.எனவே, விவசாயிகளின் நலன்கருதி, நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.