கோயம்பேடு : சவாரிக்கு வந்த வட மாநில வாலிபர்களிடம் அதிக பணம் கேட்டு தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்தாஸ், 34. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு, வட மாநில வாலிபர்கள் எட்டு பேரை ரயிலில் அழைத்து வந்தார். நேற்று, சென்னை சென்ட்ரல் வந்தடைந்த எட்டு பேரும், அங்கிருந்து இரண்டு ஆட்டோக்களில் கோயம்பேடு வந்தனர்.
அப்போது, பேசிய தொகையிலிருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக பணம் கேட்டு, வட மாநில வாலிபர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பணம் தர மறுத்த வட மாநில வாலிபர்களை, சரமாரியாக தாக்கி மூன்று மொபைல் போன்களை பறித்து சென்றனர்.இது குறித்து அரவிந்தாஸ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், சென்னை சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கார்த்திகேயன், 27, ரிதீஷ், 25, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.