திருப்பூர்:சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டு பதிவு சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை விகிதம் பெரும் வேறுபாடாக உள்ள தொகுதிகளில் அவற்றை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் பிப்., மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவே இருந்தது.மக்கள் தொகை எண்ணிக்கையில் வாக்காளர் எண்ணிக்கை என்பது சராசரியாக 71 முதல் 72 சதவீதம் என்பது, தேர்தல் கமிஷனின் கணக்கீடு.
கடந்த 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இது 75.12 சதவீதம் என்ற அளவில் இருந்தது.பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்வதில் நிலவிய சிக்கல்கள் காரணமாக பல தொகுதிகளிலும் இந்த கணக்கீட்டுக்கு ஏற்ப ஓட்டுப் பதிவு சதவீதம் இல்லை. பல தொகுதிகளில் இந்த கணக்கீடு 80 சதவீதத்துக்கு மேல் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளிலும், 65 சதவீதத்துக்கு குறைவாக ஓட்டுப் பதிவான தொகுதிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்காளர்கள் உள்ள 39 சட்டசபை தொகுதிகள்; 65 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்த 31 தொகுதிகளில் உரிய கலெக்டர் வாயிலாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 5,83,659 ஆகும். இதில் வாக்காளர் எண்ணிக்கை 3,79,113. இதில் ஓட்டுப்பதிவு 62.44 சதவீதம். அதே போல் திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் தொகை 4,50,490. இதில் வாக்காளர் எண்ணிக்கை 2,76,473. ஓட்டுப் பதிவு 62.75 சதவீதம்.
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், அடையாள அட்டை பெறுதல், உரிய வாக்காளர் பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.