நாமக்கல், :'நீட்' தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கும் வகையில், முன் ஆயத்த பயிற்சி, நாமக்கல்லில் நடந்தது.
மருத்துவப்படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 2020-21ல் கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த, 16 அரசு பள்ளி மாணவ, மாணவி யருக்கு, மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, மாணவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கவுள்ளது. அதற்காக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த, 215 மாணவ, மாணவியருக்கு, தேர்வுக்கான முன் ஆயத்த பயிற்சி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. காலை, 10:15 முதல், 11:15 வரை, என, ஒரு மணி நேரம், 50 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
அதில், குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுத்து மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, நீட் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் இருந்து 'நீட்' தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கு, ஆயத்தப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, 45 நாட்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு பாடத்துக்கு, 12 பேர் வீதம், மொத்தம், 60 ஆசிரி யர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். மாணவ, மாணவியர் அங்கேயே தங்கி முழுநேர பயிற்சி எடுக்கின்றனர். அதன் மூலம், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், அதிக அளவில் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி சேர்க்கையில் இடம் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.