குன்றத்துார், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்றதால், வெளியேற்றப்படும் உபரி நீர், 150 கன அடியாக குறைக்கப்பட்டது.புறநகர் பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியது.21ம் தேதி ஏரியில் இருந்து, 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அன்று இரவு, ஸ்ரீ பெரும்புதுார் பிள்ளைப்பாக்கம், காட்ரம்பாக்கம், நந்தம்பாக்கம் பகுதிகளில், 5. செ.மீ., மழை பெய்தது. இதனால், ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. நீர்மட்டம் 23.60 அடியாகவும், கொள்ளளவு 3.5 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. இதையடுத்து, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.இரண்டு நாட்களாக மழை பெய்யாததால், நீர் வரத்து நின்று விட்டது. நேற்றைய நிலவரப்படி நீர் மட்டம், 23.30 அடியாகவும், கொள்ளளவு, 3.4 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நீர் வரத்து நின்றுவிட்டதால், உபரி நீர் திறப்பு, 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.