டயர் வெடித்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது, கன்டெய்னர் லாரி மோதியதில், இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, அருணா பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராமசாமி, 62, சின்னசாமி, 53. இவர்கள் உள்பட, 4 பேர், அறுவடை செய்த தக்காளியை, மினி சரக்கு வேனில் ஏற்றி, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். வேனை, இளங்கோவன், 30, என்பவர் ஓட்டினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு, தலைவாசல், மணிவிழுந்தானில் சென்றபோது, வேனின் டயர் வெடித்து நின்றது. அப்போது, மாற்று டயர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இரவு 2:00 மணிக்கு, வேனின் பின்பகுதியில் ராமசாமி, சின்னசாமி நின்றிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, சாலையோரம் நின்றிருந்த வேன் மீது மோதியது. அதில் ராமசாமி, சின்னசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தலைவாசல் போலீசார், கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவான டிரைவரை தேடுகின்றனர்.