கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஓசூரில், 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, ஓசூர் ஓட்டல் ஹீல்ஸ் கூட்டரங்கில் வரும் ஜூலை, 8 முதல், 19 வரை, 12 நாட்கள் குளிர்சாதன வசதியுடன் புத்தக கண்காட்சியை நடத்தவுள்ளது. இதில், 100 அரங்குகள் மற்றும் 2 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகிறது. நாள்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கம். எனவே, மாவட்ட மக்கள் இந்த புத்தக திருவிழாவை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.