நாகப்பட்டினம்:நாகை அருகே முதலிரவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மணப்பெண், மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தலைமறைவான மணமகனை போலீசார் தேடுகின்றனர்.
திருமணம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த நாகராஜன் மனைவி பரமேஸ்வரி, 48. இவரது மகள் நளினி, 26. நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் பிச்சையன் மகன் ராஜ்குமார், 37.இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன், ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஹிந்து முறைப்படி, கடந்த 27ல் திருமணம் நடந்தது.
இந்நிலையில், மணப்பெண்ணின் தாய் பரமேஸ்வரி, எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:திருமணத்திற்கு வரதட்சணையாக 12 சவரன்நகை, பைக் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கினோம்.
அலறல்
மாப்பிள்ளை வீட்டில் நடந்த முதலிரவின் போது மாப்பிள்ளை, என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள், முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர்.அதை பார்த்து, ராஜ்குமார் தப்பி விட்டார். உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்த எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனநலம் பாதித்தவரை போல நடந்துக் கொண்ட மணமகன் ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறிஇருந்தார்.மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.