வெள்ளியணை அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு, இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை பள்ள சங்கனுார் பகுதியை சேர்ந்தவர் தனபால், 34; கூலித்தொழிலாளி. இவர் அம்பிகா, 30, மேனகா, 24, ஆகிய சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். அதில், அம்பிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவர் இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த, 30 முதல் அம்பிகாவை காணவில்லை. இதுகுறித்து, தங்கை மேனகா கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார், கணவர் தனபாலிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அம்பிகாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால், அவரை அடித்து கொலை செய்து, தெற்கு மேட்டுபட்டியில் உள்ள, விவசாய கிணற்றில் வீசி விட்டதாக, போலீசாரிடம் தனபால் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று மதியம் விவசாய கிணற்றிலிருந்து அம்பிகா உடலை, வெள்ளியணை போலீசார் மீட்டு, கணவர் தனபாலை கொலை வழக்கில் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம், வெள்ளியணை
பகுதியில், பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.