தாளவாடி - கோட்டமாளம் இடையே இயக்கி நிறுத்தப்பட்ட பஸ்சை, பள்ளி குழந்தைகள் நலன் கருதி, மீண்டும் இயக்க வலியுறுத்தி, பெற்றோர்கள் மனு தந்தனர்.
கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள், ஈரோடு டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்.,களில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் மூன்று அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது. கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது. திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும், 80 முதல், 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். 20 கி.மீ., துாரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல, பள்ளி நேரத்தில் பஸ் வசதி இல்லை.
புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்பதால், பல காரணத்தால், பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. டூவீலர் போன்ற வாகனங்களில் பயணிப்பதும் ஆபத்தானது. திங்களூர், கேர்மாளம் பகுதி கிராமங்களில், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைத்து தேவைக்கும் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர்.
திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து, தாளவாடி டெப்டோவில் இருந்து இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டது. பள்ளி செல்லும் மற்றும் விடும் நேரத்துக்கு ஏற்ற வகையில், இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு செய்தால், 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளும், 6,000க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர். இவ்வாறு கூறினர்.