பாசன பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, பவானி ஆற்றில் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் அணை மொத்த நீர்மட்டம், 105 அடி; கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை,அணைக்கு வினாடிக்கு, 6,527 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,83.82 அடி, நீர் இருப்பு, 17.79 டி.எம்.சி.,யாக இருந்தது.
ஈரோடு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால்,அரக்கன் கோட்டை - தடப்பள்ளி பாசனத்திற்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட, 900 கன அடி தண்ணீர்,நேற்று காலை முதல், 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.