கோவை: ''தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தவில்லை,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, நேற்று கோவை வந்த வேலுார் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சு நடத்தினார். சிறுபான்மையினர் நலன் கருதி, பா.ஜ., அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கினார்.
வேலுார் இப்ராஹிம் கூறியதாவது:
சிறுபான்மை மக்களை பா.ஜ., கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன், கோவை வந்துள்ளேன். தற்போது 20 பேர் இணைந்துள்ளனர். மேலும் பலர், இம்மாத இறுதியில் நடக்கும் விழாவில், பாதிரியார் பிரின்ஸ் தளியத் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர்.தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்கிறது. பாலியல் கொடுமைகள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன.
தி.மு.க., அரசு சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், மத்திய அரசு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. பிரதமர் மோடி, சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும், 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
போனில்கொலை மிரட்டல்
'போனில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.அவரது புகார் விவரம்:
நான் கோவை கணபதியில் இருந்தபோது, என் மொபைல் எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, ஆடியோ மெசேஜ் வந்தது. ஆண் குரலில் பதிவு செய்யப்பட்டிருந்த அதில், எனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.