ஆரணி:ஆரணி அருகே, மகளின் வாழ்க்கையை எண்ணி வருந்திய பெற்றோர், தங்கள் மூன்று மகள்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன், 50; தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி, 48. இவர்களது மகள்கள் சரோஜினி, 30, லட்சுமி, 28, ஜெயந்தி, 25.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சரோஜினிக்கு, துந்திரீகம்பட்டைச் சேர்ந்த தினகரன், 32, என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தை இல்லை; தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.பத்து நாட்களுக்கு முன் அக்ராபாளையத்தில் சரோஜினியின் பெற்றோர் புதிய வீடு கட்டி கிரஹபிரவேசம் நடத்தினர். இதில் பங்கேற்க வந்த சரோஜினி, தன் தாய் வீட்டில் இருந்தார்.தினகரன், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் இறந்தார். அதிர்ச்சியடைந்த சரோஜினியின் பெற்றோர் மற்றும் இரண்டு தங்கைகள், சரோஜினியின் வாழ்க்கையை எண்ணி வேதனை அடைந்தனர்.
அர்ஜுனன், ஜெயலட்சுமி, சரோஜினி மற்றும் இவர்களது தங்கைகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தனர். இதற்கிடையே, கணவரின் இறுதி சடங்கிற்கு சரோஜினி மற்றும் அவரது பெற்றோர் வராததால், உறவினர்கள் அவர்களை தேடிச் சென்றனர்.அப்போது, ஐந்து பேரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.