தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்லத்துரை. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன், ராஜபாளையத்தை சேர்ந்த தனுஷ் குமார் எம்.பி.,யை மாவட்ட செயலாளர் ஆக்க முயற்சித்தார்.
இதற்கு தென்காசி மாவட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.சென்னையில் தி.மு.க.,கட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்குமார் ,தென்காசி மாவட்ட செயலாளர் ஆக போட்டியிட மனுவே செய்யாத நிலையில் அவருக்கு பொறுப்பு தருவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. இரு தரப்பினரும் சென்னையில் காத்திருக்கின்றனர்.
இதனிடையே தென்காசி முதன்மை கோர்ட்டில் தி.மு.க,வை சேர்ந்த விஜய அமுதா என்பவர் சார்பில் ஒரு சிவில் வழக்கு தொடரப்பட்டது.தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக தென்காசியில் வைத்து நடத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு அக். 28ல் விசாரணைக்கு வருகிறது.
தற்போதைய மாவட்ட செயலாளர் செல்லத்துரையிடம் கேட்டபோது, ''நிறைய பேர் போனில் கேட்கிறார்கள். நான் வழக்கு தொடரவில்லை. சென்னையில் உள்ளேன். இதைக் கேள்விப் பட்டதும் என் உயிரே போச்சு. எனக்கு எதிராக செயல்படுபவர்கள் இதனை செய்துள்ளனர்.நாளை வழக்கை வாபஸ் பெறுவார்கள். இல்லையென்றால் தீக்குளிப்பேன். கட்சி தலைமை என் மீது நல்ல எண்ணம் கொண்டுள்ளது. அதனை கெடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்,''என்றார்.