ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க கோரி தடையின்மை சான்று வழங்க, 200 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை வரும், 24ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்காலிக பட்டாசு கடை அமைக்க வியாபாரிகள், உரிய அனுமதியை பெற தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பட்டாசு கடை அமைக்க அனுமதிப்பது குறித்து, தீயணைப்பு, போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:
தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க, கடந்த, 30ம் தேதி கடைசியாக வருவாய்த்துறையினர் அறிவித்திருந்தனர்.
இதற்காக, 200 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்டத்தில் உள்ள, 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றை, தீயணைப்பு அலுவலர்கள் முழுமையான ஆய்வுக்கு பின் வழங்குவர். குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய
அறிவுறுத்துவர்.
தடையின்மை சான்று கோரி, தினமும் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை உடனுக்குடன் அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் அருகே, தினமும் சமையல் நடைபெறும் இடத்தின் அருகே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.