சென்னை, :கொளத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், 9.02 கோடியில் முடிவடைந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அத்துடன் 38.98 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின், நேற்று கொளத்துார் சட்டசபை தொகுதியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தீட்டி தோட்டம் முதல் தெருவில், 1.27 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, இறகு பந்து உள் விளையாட்டரங்கை திறந்து வைத்தார்.
மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். வீனஸ் நகரில், 7.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லுாரி மாணவர் விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில், விடுபட்ட தெருக்களுக்கு, 19.56 கோடி ரூபாய் மதிப்பில், கழிவு நீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து, குமாரப்பா சாலை வரை, 37 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் குழாய் அமைக்கப்பட உள்ளது. ஜி.கே.எம். காலனி 24வது தெருவில் இருந்து, பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை, 97 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கழிவு நீர் குழாய் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில், பந்தர் கார்டன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 4.37 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள்; பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 4.99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் உட்பட மொத்தம் 38.98 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.
பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலை பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில், ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள், மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, ராஜகண்ணப்பன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.