நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி அளவில் நடந்த, கலைத்திருவிழா போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கலைத்திறன்களை, வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், தாலுகா, மாவட்டம், மாநிலம் வாரியாக நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், கலைத்திருவிழா போட்டி, 6 முதல், 8ம் வகுப்பு வரை, 9 மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி அளவிலான கலைத்திறன் போட்டிகள், ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில், நேற்று துவங்கி வரும், 28 வரை நடக்கிறது. நாமக்கல் ஒன்றியம், காவேட்டிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த கலைத்திறன் போட்டிக்கு, பள்ளி தலைமையாசிரியர் கயல்விழி தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு தலைவர் அனிதா துவக்கி வைத்தார்.
வார்டு உறுப்பினர் தேன்மொழி, வட்டார கல்வி அலுவலர் மாதவன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு, ஓவியம், அழகு கையெழுத்து தமிழ், ஆங்கிலம், களிமண் சுதை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதேபோல், தாலுகா அளவிலான போட்டி, வரும், 29ல் துவங்கி, டிச., 5 வரையும், மாவட்ட அளவிலான போட்டி, டிச., 6 முதல், 10 வரையும் நடக்கிறது.