சோளப் பயிரை அழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி: 200 அடி உயர கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு | கரூர் செய்திகள் | Dinamalar
சோளப் பயிரை அழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி: 200 அடி உயர கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
Added : நவ 26, 2022 | |
Advertisement
 

குளித்தலை: கரூர் மாவட்டம், கடவூர் அருகே, விவசாயிகளிடையே ஏற்பட்ட தகராறில் சோளப் பயிரை டிராக்டர் மூலம் உழுது அழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடவூர் அருகே, பால விடுதி காவல் சரகத்துக்கு உட்பட்ட செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 55, அதே பகுதியில் வசிப்பவர் ராசு, 51. இவர்கள் இருவரும் விவசாயிகள். இந்நிலையில் இருவருக்குமிடையே நிலப் பிரச்னையில் முன் விரோதம் இருந்து வந்தது. ராமசாமி தனது வயலில் சோளம் சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், 'எனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நீ எப்படி சோளம் சாகுபடி செய்யலாம்' என ராசு கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், வாடகை டிராக்டரை கொண்டு ராமசாமி சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்களை டிராக்டரை கொண்டு உழுது ராசு அழித்ததாக தெரிகிறது.

இதை தொடர்ந்து பால விடுதி போலீஸ் ஸ்டேஷனில் இருவரும் பரஸ்பரம் புகார் அளித்தனர். இதையடுத்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சோளப்பயிரை அழிப்பதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை இயக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமசாமி தரப்பை சேர்ந்த தங்கவேல், 52, போலீசாரிடம் வலியுறுத்தினார்.
ஆனால் முழு விசாரணை முடிந்தவுடன் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர். இதற்கு உடன்படாத தங்கவேல், தனது கோரிக்கையை வலியுறுத்தி, மாவத்துார் ஊராட்சி, ரெட்டியப்பட்டியில் உள்ள சுமார் 200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவல் அறிந்த பாலவிடுதி இன்ஸ்பெக்டர் யசோதா, பாலவிடுதி பஞ்., தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, ஆர்.ஐ., சிவக்குமார், வி.ஏ.ஓ., முத்துச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கோபுரத்தில் ஏறிய தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமரசமடைந்த தங்கவேல், கோபுரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டார். ஆனால் நீண்ட நேரம் கோபுரத்தில் நின்றதால், சோர்வடைந்து, கீழே இறங்க முடியாமல் தவித்தார்.இதனால் குஜிலியம்பாறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோபுரத்தில் ஏறி, 200 அடி உயரத்தில் தவித்த தங்கவேலுவை, பத்திரமாக மீட்டனர். இதனால் நேற்று மதியம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X