பீஜிங், : சீனாவின் மேற்கு ஷிண்ஜியாங் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீனாவில் தொடர்ந்து கொரோனா பரவுகிறது. தொடர்ந்து 3வது நாளாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 'ஜீரோ கோவிட் கொள்கை' கடைபிடிக்கும் அரசு, அங்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 40 லட்சம் பேர் வசிக்கும் உரும்கி நகரில் மக்கள் 100 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இங்கு மட்டும் 2 நாளாக 100 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இங்குள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் இறந்தனர்.
இக்கட்டடத்திலும் கட்டுப்பாடுகளால் பல பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தீவிபத்து ஏற்பட்ட போது, மக்கள் வெளியேற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோபமடைந்த இப்பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; ஊரடங்கில் இருந்து விடுபட விரும்புகிறோம். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது அந்நாட்டின் தேசிய கீதத்தையும் ஒலிக்க விட்டனர்.
கட்டுப்பாடுகளுக்கு எதிராக காங்சாவோ மக்களும் போராட்டம் நடத்தினர். சுதந்திரம் இல்லை என்றால், நாங்கள் இறக்கவும் தயார் என அம்மக்கள் கோபத்துடன் குமுறினர்.