திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க, விதிமுறை பயிற்சி அளித்ததற்கு, முதல் முறையாக, 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில், டிச., 6ல் நடக்கும் மஹா தீபத்தன்று கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவர்களுக்கு அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக, 27 பொது மற்றும், 157 தனியார் இடங்கள் தேர்வு செய்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு, உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவர்.
கடந்த, 22- முதல், 26 வரை அன்னதானம் வழங்க விண்ணப்பித்த திருவண்ணாமலை நகரில், 112 குழு; கிரிவலப்பாதையில், 114 குழு என, மொத்தம், 226 குழுக்களுக்கு, தனியார் திருமண மண்டபத்தில் விதிமுறை பயிற்சி நேற்று நடந்தது.
இதற்கான கட்டணமாக, நபர் ஒருவருக்கு, முதன் முறையாக, 550 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், அன்னதானம் வழங்க, 226 குழுக்களுக்கு அனுமதி சான்று வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் முருகேஷ் பேசுகையில், ''பக்தர்களுக்கு தரமான உணவு, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பாக்கெட் தண்ணீர் வழங்கக்கூடாது. இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
''உணவு கழிவுகளை போட ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்வதோடு, அவற்றை அகற்றி, இடத்தை சுத்தம் செய்து செல்ல வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.