கோவை:ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து 'டோர் டூ டோர் டெலிவரி' பார்சல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
புதிய பார்சல் சேவை திட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி ரோட்டில் உள்ள வர்த்தக சபை அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியகுமார் பேசியதாவது:
கடந்த 'பட்ஜெட்' அறிவிப்பின்போது ரயில்வே மற்றும் தபால் துறையை இணைத்து புதிய பார்சல் சேவை துவங்க திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச், 8ம் தேதி சூரத்தில் இருந்து வாரணாசிக்கு இச்சேவை துவங்கப்பட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இதை கொண்டு செல்லும் வகையில் குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதில், பாதுகாப்பான வகையில் பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. பார்சல்களை வாடிக்கையாளர் வீடுகளில் இருந்து ரயில்வே ஸ்டேஷனிற்கும், அங்கிருந்து உரிய இடத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை தபால் துறை செய்கிறது. இடைப்பட்ட சேவையை ரயில்வே மேற்கொள்கிறது.
பார்சல்களின் நிலையை வாடிக்கையாளர்கள் அறிய மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, திருப்பூரில் உள்ள ஜவுளித் தொழில் துறையினரும், ஈரோடு, சேலத்தை சேர்ந்தவர்களும் இச்சேவையால் பெரிதும் பயன்பெறுவர்.
அடுத்த ஆண்டு ஜன., இறுதிக்குள் பல்வேறு பகுதிகளில் இந்த சேவை துவங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுமிதா அயோத்யா, சரக்கு சந்தைப்படுத்துதல் முதன்மை வணிக மேலாளர் முருகராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் செயலர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.