ஈரோடு, டிச. 1-
தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை வல்லுனர் குழுவிற்கு, ஈரோடு மாவட்டத்திலிருந்து, 8 பெரிய கோவில்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இணை ஆணையர் பரஞ்ஜோதி
தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக, மாநில அளவிலான, 46-வது வல்லுநர் குழு கூட்டம், சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இந்த வல்லுநர் குழுவின் ஆய்வுகள், பரிந்துரைகள்படி, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக, ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், பவானி வட்டம் எட்டிக்குட்டை அரங்கநாதர் கோவில், வெள்ளோடு ராசா கோவில், பெருந்துறை விஜயபுரி அம்மன் கோவில், காங்கயம்பாளையம் நட்டாதீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், பவானிசாகர் அருகே கெஜட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவர் வீரசுந்தரி கோவில், கோபி வட்டம் பொலவக்காளிபாளையம் பொன்னேந்தி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட, 8 கோவில்களை திருப்பணிக்கு தேர்வு செய்து, வல்லுனர் குழுவுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும், இப்பட்டியலில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து, எந்தெந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளலாம் என வல்லுனர் குழு பரிந்துரைத்த பின், அந்த கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அவர் கூறினார்.