பெருந்துறை, டிச. 4-
மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரத்தில், பெருந்துறை அருகே தலைமை ஆசிரியை, கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கீதாராணி, 53; துடுப்பதி பஞ்., பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. கடந்த நவ.,21ம் தேதி பள்ளி மாணவர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. தலைமை
ஆசிரியை கீதாராணி, பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததால், கொசு கடித்ததாக அந்த மாணவர் கூறினார். இதுகுறித்து மாணவனின் தாயார்,
கலெக்டரிடம் புகார் செய்தார்.
அவர் உத்தரவின்படி பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம், பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதில் ஆறு பட்டியலின மாணவர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிந்தது. விசாரணையின்போது கீதாராணி பணிக்கு வராததால், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். அதேசமயம் மாணவனின் தாய் புகாரின்படி, குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை தேடி வந்தனர். கீதாராணியை நேற்று கைது செய்த போலீசார், ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.