மதுரை: மதுரை ஆவினில் 2019 - 2020ல் முறைகேடாக பணிநியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை பணி நீக்கம் செய்யவும், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரையில் உதவிப் பொது மேலாளர் முதல் உதவியாளர் வரை 61 பணியிடங்களுக்கான நியமனம் நடந்தது. இதில் எழுத்து தேர்வில் குறிப்பிட்டவர்களுக்கு வினாத்தாள்களை லீக் செய்தது, விண்ணப்பத்தில் வங்கி காசோலை மாற்றம், நேர்காணலுக்கு குறிப்பிட்ட நபர்களை அழைத்தது, நியமனம் செய்யப்பட்ட நாளின்படி டிகிரி முடிக்காத ஒருவருக்கு பணி வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தன.
முறைகேடுகள் குறித்து தினமலர் நாளிதழிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக சென்னை ஆவின் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகள் குழு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்த்தன. இதையடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நேர்காணலின்போது டிகிரியை முழுமையாக முடிக்காத 'எக்ஸிகியூட்டிவ் அலுவலர்' ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்போதைய சான்றிதழ் சரிபார்த்த அலுவலக மேலாளர் (நிர்வாகம்) உட்பட 5 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் அப்போது நேர்காணல் நடத்திய குழுவில் பொது மேலாளர் தலைமையில் துணைப் பதிவாளர், உதவிப் பொது மேலாளர்கள், மேலாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் அதிகாரிகள் தவிர்த்து அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆவின் ஊழியர்கள் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை துவங்கியது ஆறுதலாக உள்ளது. நேர்காணல் குழுவில் இடம் பெற்ற ஆவின் அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்ற பொது மேலாளர், துணைப் பதிவாளர், உதவி பொது மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இனி தவறு செய்பவர்கள் அச்சப்பட வேண்டும்" என்றனர்.
எங்களுக்கு நாங்களே நீதிபதி
இந்த முறைகேட்டில் பொது மேலாளர் உட்பட நிர்வாக பிரிவு மற்றும் தொழிலாளர் உறவு பிரிவை சேர்ந்தவர்கள் தான் அதிகம் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மதுரை ஆவினில் தற்போது அப்பிரிவுகளில் 2019 - 2020ல் தவறு செய்தவர்களே அதே பணியில் நீடிக்கின்றனர். தவறு செய்தவர்களே அதற்கான தண்டனையை முடிவு செய்யும் நிலை உள்ளது.