குமாரபாளையம், டிச. 5-
சபரிமலை சேவைக்கு கல்லுாரி மாணவர்கள், 55 பேரை, ஐயப்ப சேவா சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட, கல்லுாரி மாணவர்கள் பல கட்டங்களாக அனுப்பி வைப்பது வழக்கம்.
அதன்படி, குமாரபாளையம் 'ஜெட்' திருமண மண்டபத்தில் இருந்து, சபரிமலை சேவைக்கு, சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 55 பேர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா, மாவட்டத்
தலைவர் பிரபு தலைமையில்
நடந்தது.
இதுகுறித்து ஐயப்பா சேவா சங்க மாவட்டச் செயலாளர் ஜெகதீஸ் கூறியதாவது:
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலரையும் அனுப்பி வைப்போம். இவர்கள், ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், அவசர சிகிச்சை வழங்குதல், பிராணவாயு அறையில் ஆக்சிஜன் கொடுத்தல், உயிர் நீத்தார் உடலை, சொந்த ஊரில் கொண்டு போய் சேர்த்தல், புண்ணிய பூங்காவனம் எனப்படும் ஐயப்பன் கோவில் வளாகம் முழுதும் துாய்மைப்படுத்தும் பணி செய்தல் உள்ளிட்ட, பணிகள் செய்வர்.
மூன்றாம் கட்டமாக தற்போது, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், ஐயப்ப சங்கத்தினர் உள்பட, 55 பேர், 11 நாட்கள் சேவை செய்ய அனுப்பி வைத்துள்ளோம். அதன்பின் அடுத்த குழுவினர் செல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.