ப.வேலுார், டிச. 5-
மரவள்ளி கிழங்கு விலை, டன் ஒன்றுக்கு, ஆயிரம் ரூபாய் விலை சரிந்துள்ளது, ப.வேலுார் பகுதி விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.
ப.வேலுார் சுற்றுவட்டாரப் பகுதிகளான
எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை, வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில், மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும், வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று, ஒன்பதாயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்பொழுது டன் ஒன்றுக்கு, ஆயிரம் ரூபாய் வரை குறைந்து, எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கிறது. பெரும்பாலான சிறிய ஜவ்வரிசி ஆலைகள் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், மரவள்ளிக்கிழங்கு தேவை குறைந்து, விலை சரிந்துள்ளது. இதனால் ப.வேலுார் பகுதியில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.