சென்னை : போக்குவரத்து போலீஸ்காரரை குடிபோதையில் தாக்கிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது காரை ஒட்டி வந்த பெண்ணும், அவரது ஆண் நண்பரும், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமமூர்த்தி என்ற போலீஸ்காரர், அந்த பெண்ணை 'பிரித்தீங் அனலைசர்' கருவியில் வாய் வைத்து ஊதுமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், 'ஒரு பெண்ணை எப்படி ஊத சொல்லலாம்' என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், போலீஸ்காரர் ராமமூர்த்தியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த சில திருநங்கைகள், அந்த பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் போலீசாரிடம் சண்டையிட்டுள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போதையில் காரை ஓட்டி வந்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின், எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண் நுங்கம்பாக்கம் மூர் சாலையை சேர்ந்த ஷெரின் பானு, 48 என்பதும், நிதி ஆலோசகராக இருப்பதும் தெரிந்தது. சம்பவத்தன்று ஷெரின் பானு, மும்பையை சேர்ந்த தன் ஆண் நண்பர் விக்னேஷ், 30, என்பவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு காரில் வரும்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக தடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.