சென்னை வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோடு சுரங்கப்பாதையில், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி இரு பகுதிகளாக நடப்பதால், இன்றில் இருந்து, 15ம் தேதி வரை ஒருவழிபாதையாக மாற்றப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி, பாலங்கள் துறை சார்பாக, வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு சுரங்கப்பாதையில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி நடப்பதால், இப்பணிகள் முடியும் வரை அங்கு ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
பிரகாசம் சாலை, பழைய சிறைச் சாலையில் இருந்து, எம்.சி.ரோடு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ஸ்டான்லி ரவுண்டானா, இப்ராஹிம் சாலை, ராயபுரம் மேம்பாலம், எம்.எஸ்.கோவில் தெரு, சிமெட்டெரி சாலை வழியாக தண்டையார்பேட்டை மற்றும் எம்.சி.ரோடு செல்லலாம்.
தண்டையார்பேட்டை, எம்.சி.ரோடு மற்றும் ராயபுரம் பகுதியில் இருந்து, ஸ்டான்லி மருத்துவமனை, பாரிமுனை மற்றும் தங்கசாலை நோக்கி செல்லும் வாகனப்போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. எம்.சி., ரோடு மற்றும் சிமெட்டெரி சாலை சிக்னல், ஸ்டான்லி சுரங்கப்பாதை, ஸ்டான்லி ரவுண்டானா வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.