சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெஜிகுமார், 47; எல்.ஐ.சி., ஏஜன்ட். இவரது கணவர் குமார் 2014ல் உயிரிழந்தார். மகள் ஜூலி, 25; மென்பொறியாளர்.
கடந்தாண்டு, ஜூலியின் திருமண செலவிற்காக, தனக்கு தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் உள்ளிட்ட பலரிடம், ரெஜிகுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார்.
ஜூலிக்கு திருமணம் முடிந்த பின், மேற்கண்ட மூவரும் பணத்தை திருப்பி கேட்டனர். அப்போது, அவர்களுக்கு, ரெஜிகுமார் காசோலை கொடுத்துள்ளார்.
அந்த காசோலை போலி என்பது தெரிந்தவுடன், ஆத்திரம் அடைந்த மூன்று பேரும், ரெஜிகுமாரின் புகைப்படத்தை வீட்டின் சுவரில், 'செக் மோசடி கும்பல்' என சுவரொட்டி ஒட்டினர்.
அதிர்ச்சியடைந்த ரெஜிகுமார், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக, மூன்று பேர் மீதும், தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த கவிதா, மோகன், ஜீவரத்தினம் மற்றும் சிலர், நேற்று மாலை, கிழக்கு தாம்பரம் பகுதியில், மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை முற்றுகையிட்டு, பணத்தை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த சேலையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இதில், ரெஜிகுமார் மற்றும் அவரது மகள் ஜூலி ஆகியோர், திருமணத்திற்காக பலரிடம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.