திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை, 49.77 சதவீத வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தும்வகையில், வாக்காளர் அட்டையுடன் - ஆதார் இணைப்பு நடைபெற்று வருகிறது. திருப்பூரில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து, 219 வாக்காளர் உள்ளனர்.
கடந்த அக்., மாத துவக்கத்தில், மாவட்ட மொத்த வாக்காளர்களில் 39.95 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் இணைத்திருந்தனர். ஆதார் இணைப்பில் திருப்பூர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்கியபின், ஆதார் இணைப்பு சற்று வேகமெடுத்துள்ளது.
வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு குறித்து மக்கள் மத்தியில் சுய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு முகாம்கள், ஆன்லைன் மூலம், வாக்காளர்கள், ஆதார் இணைத்து வருகின்றனர். இதுவரை, 11.50 லட்சம் வாக்காளர்கள், ஆதார் இணைத்துள்ளனர்; மாவட்ட ஆதார் இணைப்பு விகிதம், 49.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வடக்கு 'தேய்கிறது'
திருப்பூர் வடக்கு தொகுதி, ஆதார் இணைப்பில் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 80 ஆயிரத்து 577 பேரில், 32.44 சதவீதம் பேர், அதாவது, 1 லட்சத்து 23 ஆயிரத்து 464 வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.
திருப்பூர் தெற்கில் 43.47 சதவீதம்; பல்லடத்தில், 44.17 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பில், மடத்துக்குளம் முன்னிலையில் உள்ளது; இந்த தொகுதியில், மொத்த வாக்காளர் 2 லட்சத்து 33 ஆயிரத்து 177 பேரில், 61.36 சதவீதம் பேர், அதாவது, 1 லட்சத்து 43 ஆயிரத்து 76 பேர் ஆதார் இணைத்துள்ளனர்.
உடுமலையில் 58.69 சதவீதம் பேரும், அவிநாசியில், 57.57 சதவீதம்; தாராபுரத்தில் 57.18 சதவீதம் பேர்; காங்கயம் தொகுதியில், 55.16 சதவீதம் பேரும் ஆதார் இணைத்துள்ளனர்.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ''வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைப்பதில், திருப்பூர் மாவட்டம் முன்னேறி வருகிறது.
இருப்பினும், 50 சதவீத வாக்காளர்கள் இன்னும் இணைக்கவில்லை. அவர்களும் இணைத்தால், விரைவில் முதன்மை மாவட்டமாக மாறி விடும்,' என்றனர்.