திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்காத மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் மீது நெல்லை கோர்ட்டில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கழிவு நீர், திடக்கழிவை அகற்ற பாதாளச் சாக்கடைத் திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. 'அம்ருத்' திட்டம், மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் 315 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், தாமிரபரணி ஆறு நெல்லை மாநகர பகுதியில் துவங்கும் சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, உடையார்பட்டி உட்பட 16 இடங்களில் மாநகராட்சியின் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது.
பாதாள சாக்கடை திட்டத்தின் படி, கழிவு நீரை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி கமிஷனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரியும், சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன், நேற்று திருநெல்வேலி ஜே.எம்., 4வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
''ஆற்றில் நேரடியாக சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த உத்தரவிட கோரி, இதுவரை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது,'' என, முத்துராமன் தெரிவித்தார்.