கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சுயதொழிலுக்கு கடனுதவி பெற்று பயன்பெறாலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் துவங்கவும், ஏற்கனவே நடத்தப்படும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதலுக்கு கடனுதவி பெறலாம்.
பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய் வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு, உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கிரி பொருட்கள், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரு கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் உதவி பெறுவதற்கு தகுதி பெற்றவையாகும். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தனது பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும்.
அரசு 35 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவி குழுவினர்ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.
தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெறலாம். திட்டம் தொடர்பான மேலும் விவரங்களை கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.