கடலுார், : கடலுார் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில், வரும் 10ம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளில், வரும் 10ம் தேதி பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
கடலூர் தாசில்தார் அலுவலகம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்ட வழங்கல் அலுவலகங்கள், சிதம்பரம் குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களும், 60 சதவீதம் ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம்.
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மனுக்கள் அளிக்கலாம்.
இந்த கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.