திருப்பரங்குன்றம் : கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றத்தில் நேற்று காலை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. மாலையில் மலைமேல் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
நேற்று காலை 16 கால் மண்டபம் அருகே சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் தேரோட்டம் நடந்தது.
கார்த்திகை தீபம் ஏற்ற தாமிர கொப்பரை மலை மேல் கொண்டு செல்லப்பட்டது. கோயிலுக்குள் அனுக்கை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.
அதே நேரத்தில் மலை மேல் தீப மண்டபம் அருகில் உள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து விநாயகர் பூஜை, அக்னி லிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனைகள் முடிந்து தீப கொப்பரையில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கோயிலுக்குள் மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பால தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் மணி அடிக்கப்பட்டதும் மலை மேல் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதி வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது.
கோயில் மூலவர் முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது.இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார். அங்கு சொக்கப்பனை தீப காட்சி முடிந்து சுவாமி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.