உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நடையம்மாள், 45. இவர்களது மகள் செல்வி 30, இவரை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த அயன்குஞ்சரம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், 36, என்பவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு யோகிதாஸ், 10; கோகுல், 6, என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில், மாமியார் நாகக்கன்னியுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, ராமகிருஷ்ணனுடன் வாழாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக செல்வி, தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். விவாகரத்து வழக்கு விசாரணை உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாமனார் கல்வராயன் கடந்த மாதம் 6ம் தேதி இறந்து விடவே, செல்வி மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் செல்வி இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அளித்த தகவலின்படி, எலவனாசூர்கோட்டை போலீசார் சென்று, செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
போலீசார், செல்வியின் கழுத்தில் இருந்த காயங்களை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக கணவர் ராமகிருஷ்ணன், 36, மாமியார் நாகக்கன்னியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.