சென்னை :மழைக்காலத்தில் இரவு, பகல் பாராமல் கடின உழைப்பை வழங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் சிறப்பாக
பணியாற்றிய, மாநகராட்சி பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, முதல்வர் ஸ்டாலின்
கவுரவிக்க உள்ளார்.
சென்னையில், 2021ல் பெய்த கனமழை காரணமாக, 1,000-க்கும் மேற்பட்ட சாலைகள், தெருக்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல நாட்கள் தேங்கிய தண்ணீரால், மக்களின் இயல்பு வாழ்க்கை
முடங்கியது.அதுமட்டுமல்லாமல், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துார், புளியந்தோப்பு, எழும்பூர், பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர்
தேங்கியது.
இதைத்தொடர்ந்து, 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் துரித கதியில் மேம்படுத்தப்பட்டன.
இதனால், 2021ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், கடந்தாண்டு பருவமழையின் போது பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மாநகரின் மையப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கவில்லை.
ஆனாலும் கொளத்துார், பட்டாளம், புளியந்தோப்பு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதேபோல், 'மாண்டஸ்' புயல் ருத்ரதாண்டவமாடிய நேரத்திலும், மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி பொறியாளர்கள், பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி, வெள்ள நீரை வெளியேற்றினர்.
மழை நீர் வடிகால் இணைப்பு இல்லாத 100க்கும் மேற்பட்ட பகுதிகளில், 'ரெடிமேட்' கால்வாய் அமைத்து, மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால், வடகிழக்கு பருவமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இதற்கு கடுமையான உழைப்பை வழங்கிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி, வரும் 31ம் தேதி நடக்கிறது.
சென்னை மாநகராட்சியில் நடைபெறும் நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் உள்ள தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் முதல் உதவிப் பொறியாளர்கள் வரை, மழை காலத்தில் கடுமையாக பணியாற்றினர்.
அவர்களுடன் மாநக ராட்சி பணியாளர்களும், துாய்மைப் பணியாளர்களும் தொடர்ந்து பணியாற்றினர். அவ்வாறு பணியாற்றியவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகிறோம்.
தற்போது வரை, 400-க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில், இதுபோன்ற பாராட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை.
இதில், பூங்கா துறை தலைமைப் பொறியாளராக உள்ள நந்தகுமார், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் விடுப்பில் உள்ளார்.
மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே பணிக்கு வந்து, மீண்டும் விடுப்பில் சென்று விடுகிறார். அவரது பணியையும் சேர்த்து, மற்ற தலைமைப் பொறியாளர்கள் செய்தனர்.
இதனால், தலைமைப் பொறியாளர் நந்தகுமாரை தவிர்த்து, 400க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
தொடர் விடுப்பில் உள்ள தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.