நாமக்கல், ஜன. 26-
''மாவட்டத்தில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது,'' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு குடிமகனின் ஓட்டும், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் உரிமையும், வலிமையும் உண்டு என்கிறது தேர்தல் ஆணையம். அதனால் தான், ஜன., 25ல், இளைஞர்களுக்கு ஓட்டு அளிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய வாக்காளர் தினம் அறிவிக்கப்பட்டது.
ஓட்டுரிமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் ஓட்டுப்போட வைக்கும் நோக்கில், தேசிய அளவில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆதார் எண்ணை, வாக்காளர் எண்ணுடன், வாக்காளர் உதவி மைய செயலி மூலம், இணையவழியில் இணைத்துக் கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணியை சிறப்பாக செய்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட, தேர்தல் விழிப்புணர்வு நாடகங்கள், வாக்காளர் விழிப்புணர்வு பாடல், கலைநிகழ்ச்சிகள், ஓவியப் போட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக மேற்கொண்ட, 52 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., மணிமேகலை, மாவட்ட இயக்க மேலாண் அலகு, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில், அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.