கும்மிடிப்பூண்டி,--கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்குமார், 46. அ.தி.மு.க., பிரமுகர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி ரோஜா, 44. அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர். இம்மாதம், 24ம் தேதி, ரோஜா, அவரது மகன் ஜேக்கப்பை, 22, மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி மற்றும் கத்தி முனையில், ரோஜாவின் காரில் கடத்தி சென்றனர்.
பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், அன்று இரவே, இருவரும் காரில் வீடு திரும்பினர். இருவரிடம் விசாரித்தபோது, கடத்திய நபரில் ஒருவர் பரிதாபப்பட்டு விடுவித்தாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இருவரையும் கடத்திய, பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர், 26, கும்புளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், 26, ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 34, நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன், 28, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், நிலம் விற்ற வகையில், ரமேஷ்குமார் வஞ்சித்ததுடன், தொடர்ந்து இடையூறு அளித்ததால், ஆத்திரம் அடைந்த சுரேந்தர், கூட்டாளிகளுடன் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
பீஹாருக்கு சென்ற போது வாங்கிய சிறிய ரக துப்பாக்கியை கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார். கடத்திய இருவரையும் ஆந்திர பகுதியில் உள்ள காட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நிலைமையை அறிய பல்லாவா கிராமத்திற்கு சுரேந்தர் சென்றுள்ளார்.
இரு மாநில போலீசார், நுாற்றுக்கணக்கான கட்சியினர், ஊடகங்களில் பரபரப்பான செய்திகள், நிலைமையின் விபரீதம் கண்டு சுரேந்தர் அச்சம் அடைந்து உள்ளார்.
அவர் அறிவுறுத்தியபடி, இருவரையும் தப்பிக்க விடுவது போல நாடகமாடி தப்பிக்க விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பாதிரிவேடு போலீசார், நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த துப்பாக்கி, கத்திகளை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.