ஈரோடு, ஜன. 31-
''பணம் பட்டுவாடா தொடர்பான பேச்சு வீடியோ வெளியானது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டேன்,'' என, காங்., வேட்பாளர் இளங்கோவன் மறுத்து விட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்., சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர்களுக்கு, பெருந்துறை சாலையில் காரியாலயம் உள்ளது.
அங்கு நேற்று, தி.மு.க., அமைச்சர்கள் நேரு, வேலு, முத்துசாமி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் இளங்கோவனும், அமைச்சர் நேருவும் பேசியதாக ஒரு வீடியோ பதிவு வெளியானது.
முழு பேச்சாக இல்லாமல், சில வார்த்தைகள் பதிவாகாமலும், சில வார்த்தைகள் கோர்வை இன்றி காணப்பட்டது.
அந்த வீடியோவில் அமைச்சர்கள் முத்துசாமி, வேலு மைக்கில் பேசிய போது, அமைச்சர் நேரு இளங்கோவன் பேசியதை, டைட்டில் போட்டு வெளியான வீடியோவில் கூறியதாவது: அவன் என்னத்துக்கு. அவன் தண்டம். மந்திரியெல்லாம் கூடாது. தேவை இல்லை. நான் நேத்தே சொல்லிட்டேன். எல்லாரும் வந்துடுங்கன்னு.
மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். அப்புற சொல்லனும்னு நெனச்சேன். காசு பணல்லாம் குடுக்கணும். எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு, மதியம் பணம் குடுத்து செட்டில் பண்ணிட்டு, வார, 30, 31ம் தேதி, 1ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடிச்சுடனும்.
பின், 31 பூத்திலும், 10 ஆயிரம் பேர் ரெடி பண்ணனும். நாளை தலைவர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தர போறாரு.
இதற்கிடையே இப்போ நான் புறப்பட்டு திருச்சி போய், அங்கிருந்து சென்னை போய், அங்க கூட்டத்தை முடிச்சுட்டு கோயம்புத்துார் போய், 31 ராத்திரி இங்க வந்துருவேன்.
எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பாப்போம். இல்லை, நாமளே பண்ணிடுவோம்.
நாசர், 5க்கு மேல வேண்டாம், வேண்டாம் என்கிறான். நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான். லோக்கல் ஆளுங்க, விடுதலை சிறுத்தைங்க எங்கெல்லாம் கொடுக்கவில்லயோ, அங்க நம்ம குடுத்து விடலாம்.
செந்தில்பாலாஜி கொடுத்துவிட்டார். ஏன் அவன இங்க ஒக்கார வைக்கணுமா.
இவ்வாறு வீடியோ பேச்சு நிறைவடைகிறது.
இப்பதிவை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வேட்பாளர் இளங்கோவன் கூறியதாவது:
பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை. இதுபற்றி எனக்கு தெரியாது. அதுபோல, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சி கூட்டணிகளில் பல்வேறு கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். அதை வெட்டியும், ஒட்டியும் தற்போது வெளியிட்டு வருகின்றனர். இதை நான் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.