திருப்பூர்;ஆறாவது முறையாக கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் ரத்து அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இந்த ரயிலே ரத்து செய்யப்பட்டு வருவதால், தெற்கு ரயில்வே மீது பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலின் போது, கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது; இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 2022 ஜூலை, 11 ல் பாசஞ்சர் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மூன்று நாள் மட்டுமே ரயில் இயங்கிய நிலையில், ஜூலை, 14 முதல், 24 வரை பத்து நாட்களுக்கு காவேரி - ஆனங்கூர் இடையே நடந்த பராமரிப்பு பணியால், ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
அதன்பின், தொடர்ந்து ஆறாவது முறையாக, ரயில் ரத்து என்ற அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் கோட்டம் வெளியிட்ட அறிவிப்பில், 'இருகூர் - சூலுார் இடையே பொறியியல் மேலாண்மை பணி நடப்பதால், பிப்., 1ம் தேதி முதல் பிப்., 28ம் தேதி வரை, 28 நாட்களுக்கு, கோவை - சேலம், சேலம் - கோவை ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது,' என கூறப்பட்டுள்ளது.
பொறியியல் மேம்பாடு, தண்டவாள பராமரிப்பு பணியை காரணம் காட்டி, ஐந்து மாதங்களாக பாசஞ்சர் ரயில் இயங்காத நிலையில், ஆறாவது முறையாகவும், கோவை - சேலம்பாசஞ்சர் ரயிலே ரத்து செய்யப்படுவது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளடக்கிய மேற்கு மண்டல ரயில் பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.