தன்பாத் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 14 பேர் உடல் கருகி பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் ஜோராபடாக் நகரில் 'ஆஷிர்வாத் டவர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று மாலை 6:00 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து 40 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 11:30 மணி வரை உயிரிழந்தநிலையில் மூன்று குழந்தைகள் 10 பெண்கள்உட்பட 14 கருகிய உடல்கள் மீட்கப்பட்டன. பலத்த காயம் அடைந்த நிலையில் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் “போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறேன்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி சமூக வலைதளத்தில் “விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இன்னும் 50 பேர் சிக்கியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.