கடலுார்,: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதால், கடலுார் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக, கடலுார் துறைமுகத்தில், 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில், 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கடலுார் மீன்வளத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், 'மறு அறிவிப்பு வரும் வரை, பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடலுார் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், கடலுார் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.