துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடியில், ஐ.டி.சி., என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு ஆறு மாதங்களாக, அசாம் மாநிலம், நாகர்கிதா பகுதியைச் சேர்ந்த தலுக்கர் புரோபின், 40, காவலாளியாக பணிபுரிந்தார்.
நிறுவன ஊழியர்கள், 'லாக்கரை' பூட்டிவிட்டு, சாவியை அங்கு வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். இதை நோட்டமிட்ட தலுக்கர் புரோபின், கடந்த 23ம் தேதி சாவியை எடுத்து, பீரோவில் இருந்த, 24 லட்சம் ரூபாயை திருடி, அசாம் தப்பிச் சென்றார். நிறுவன மேலாளர் ரவிபிரபு, துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, தனிப்படை போலீசார் அசாம் மாநிலம் சென்று விசாரித்து, தலைமறைவாக இருந்த தலுக்கர் புரோபினை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். நேற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்து, 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.