தியாகதுருகம்-தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளத்தில் நுாற்றாண்டு பழமையான பெரியநாயகி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இது பெரியாண்டார் கோவில் என, அழைக்கப்படுகிறது.
இக்கோவில் செப்பனிடும் பணி பக்தர்கள் முயற்சியால் நிதி திரட்டி கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள தாமரைக்குளம் செப்பனிடப்பட்டது.
திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில், இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை காலை 9:00 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.