கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இதில், முக்கிய இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஊர் பெயர்கள், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், பல சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை, அருகில் உள்ள மரங்களின் கிளைகள் மறைத்துள்ளன. இதனால், வெளி மாநில லாரி ஓட்டுனர்கள், சுற்றுலா பஸ், வேன் மற்றும் கார் ஓட்டுனர்கள், வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கரூர் - ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவு பகுதியில், ஊர் பெயர்கள் கொண்ட போர்டு, மரக்கிளைகள் மறைத்துள்ளன.
எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைக்காத வகையில், மரக் கிளைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.