கரூர்: கடும் பனிப்பொழிவால், எலுமிச்சை பழத்துக்கு விற்பனையின்றி விலை குறைந்துள்ளது. இதனால், கோடையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம்பாளையம்பட்டி, வீரன்பட்டி, கர்நாடக மாநிலம் பிஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, கரூர் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக, கொண்டுவரப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை ரூ.3,000 முதல் ரூ. 4,000 வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 50 கிலோ கொண்ட, ஒரு மூட்டை, 2,000 ரூபாய் முதல், 2,200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து, எலுமிச்சை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களாக கடும் பனிப்பொழிவு உள்ளதால், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழத்துக்கு தேவை குறைந்துவிட்டது.
இதனால், எலுமிச்சை விலை பல மடங்கு குறைந்துள்ளது. விரைவில் கோடைகாலம் துவங்க உள்ளதால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, விலை உயர வாய்ப்புண்டு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.